ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி மரணம்


கடந்த இரு நாட்களாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி மாணவி உயிரிழந்தார்.
டெல்லியில் கடந்த 16-ம் திகதியன்று ஓடும் பேருந்தில் 23 வயதான மருத்துவகல்லூரி மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார்.
பலத்த காயங்களுடன் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டெல்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் திகதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணியளவில்(சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு) உயிரிழந்தார்.