புதன், 30 நவம்பர், 2011

யேர்மனியில் பேரெழுச்சியுடன் பல ஆயிரம் மக்களின் வருகையுடன் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு 2011

தமிழினத்தின் விடுதலை ஒன்றையே மூச்சாக்கி ஒப்பற்ற தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் "தேசத்தின் சொத்து" மேதகு வே.பிரபாகரன் வழிகாட்டுதலில் தாயகத்தை ஆக்கிரமித்து நின்ற சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை கொன்று வீழ்த்தி வீரச்சாவடைந்த மானமறவர்களான மாவீரர்களை போற்றி வணங்கி நிற்கும் நிகழ்வு யேர்மனியில் பேரெழுச்சியுடன் 8.000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வருகையுடன் நடைபெற்றுள்ளது.
யேர்மனியில் பேரெழுச்சியுடன் பல ஆயிரம் மக்களின் வருகையுடன் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு தமிழினத்தின் விடுதலை ஒன்றையே மூச்சாக்கி ஒப்பற்ற தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் "தேசத்தின் சொத்து" மேதகு வே.பிரபாகரன் வழிகாட்டுதலில் தாயகத்தை ஆக்கிரமித்து நின்ற சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை கொன்று வீழ்த்தி வீரச்சாவடைந்த மானமறவர்களான மாவீரர்களை போற்றி வணங்கி நிற்கும் நிகழ்வு யேர்மனியில் பேரெழுச்சியுடன் 8.000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வருகையுடன் நடைபெற்றுள்ளது.
ஈழத்தில் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அழித்தொழித்த சிங்களன் தமிழரின் வீர வரலாற்றையும் அழித்தொழித்து வருகின்றான். எந்தவித தடையமும் இல்லாது தமிழர்களது வரலாற்றை நிர்மூலமாக்கும் வெறியுடன் ஈழமண்ணில் வெறியாட்டம் போடும் சிங்களப் படைகள் ஒப்புவமை இல்லா மாவீரச்செல்வங்கள் துயில்கொள்ளும் துயிலுமில்லங்களை அழித்ததோடு மட்டும் நில்லாது கிண்டிக் கிளறி கோரத்தாண்டவம் ஆடியது.
இவ்வாறு மாவீரர்களது கல்லறைகள் சிங்களத்தால் நாசப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புலத்தில் வீச்சுடன் மாவீரம் நிமிர்ந்தெழுந்துள்ளது. பல்வேறு குழப்பங்களிற்கு மத்தியில் மானமறவர்களது நினைவுநாளை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் முழுவீச்சுடன் முன்னெடுத்து வருகின்றனர்.
யேர்மனியில் டோர்ட்முன்ட் நகரில் ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் எழுச்சியுடன் மாவீரர்தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கிலான தமிழர்கள் மிகவும் உணர்வெழுச்சியுடன் தமது உறவுகளிற்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஒன்று கூடியிருந்தனர்.
நிகழ்வின் சிறப்பாக அரங்கின் ஒரு பகுதியில் செயற்கை மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள மாவீரர்களது படங்களுக்கு அந்தந்த மாவீரர்களது உரித்துடையவர்கள் மலரஞ்சலி செலுத்தவும் ஈகைச்சுடர் ஏற்றவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மாவீரர்நாள் நினைவு வணக்க நிகழ்வில் முதலாவதாக பொதுச்சுடரினை பேராசிரியர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார் ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கீதத்துடன் தேசியக்கொடியை மாவீரர், வீரவேங்கை திருமாறன் அவர்களின் தாயார், திருமதி. தெய்வேந்திரம் பவானியம்மா அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதனை அடுத்து பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மாவீரர்துயிலுமில்லத்தில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை மாவீரர் லெப்டினன்ட் மேகலா அவர்களின் சகோதரி, திருமதி. நந்தகுமாரி சிவராயா அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலிக்கப்பட்டது . அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் இணைந்து தமிழீழம் மலர அயராது தேசியத் தலைவரின் உறுதியோடு தளராமல் பயணிப்போம் என உறுதிமொழி கூறினர்.
மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தமது தியாக செல்வங்களுக்கு மலர்தூவி சுடர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்கமேடையில் தமிழீழம் இசைக்குழு, இராக வேங்கை இசைக்குழுவின் இசைவணக்கம், சிறுவர் உரை, கவிதை, எழுச்சி நடனங்கள், நாடகம், நாட்டிய நாடகம், மாவீரர் வெற்றிக்கிண்ணப் பரிசளிப்பு, இறுவட்டு வெளியீட்டு நிகழ்வுகள், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன், வை.கோ ஆகியோரது மாவீரர்நாள் செய்திகள் ஒளிவடிவில் ஒலிபரப்பட்டமை, யேர்மனியில் கைதுசெய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர்களுக்கான மனிதநேயப் பணியாளர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்களுக்கான கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகள் சிறப்பாகவும் எழுச்சிபூர்வமாகவும் இடம்பெற்றன.
சிறப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், மனித நேயப்பணியாளர்கள் யேர்மன் அரசாங்கத்தால் கைது செய்யப்படதை தொடர்ந்து அதற்கு எதிராக தமது வழக்கை வெற்றிகரமாகக் கொண்டு சென்று தமது விடுதலைக்கு காரணமான திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழுவுக்கு சிறப்பான கௌரவம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது . அதை தொடர்ந்து மனிதநேயப் பணியாளர்கள் சார்பில் இவ்வழக்குத் தொடர்பாக வாதிட்ட வழக்கறிஞர்களின் இணைப்பாளர் வழக்கறிஞர் திரு Nagler அவர்கள் இவ்வழக்குத் தொடர்பாகத் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
அத்தோடு இவ் மாபெரும் நினைவெழுச்சியில் தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்திருந்த புதிய பார்வையின் ஆசிரியரும், தமிழக முதல்வரின் தோழி சசிகலா அவர்களின் துணைவரும், ஐயா பழ. நெடுமாறன், திரு. வை. கோ, த. பாண்டியன் போன்ற தமிழீழ ஆதரவுத் தலைவர்களோடு இணைந்து தமிழீழ மலர்வுக்காய் உழைத்து வருபவரும், தஞ்சாவூரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற நினைவிடக் கட்டுமானப் பணிகளைப், பழ. நெடுமாறன் அவர்களோடு சேர்ந்து முன்னெடுத்து வருகின்ற தமிழ் உணர்வாளரும், தமிழகத்திலிருந்து வருகை தந்தவருமான, திரு. ம. நடராஜன் அவர்களும்,பேராசிரியர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும் , சிறப்புரைகள் வழங்கினர். மாவீரர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற தனித் தமிழீழமே தமது நோக்கு எனும் பாதையில் பயணிக்கும் வகையில் இப் புனித மாதத்தில் யேர்மன் சட்டங்களுக்கு அமைய பதிவுசெய்யப்பட்ட யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை 2011 றாம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சந்திப்புகளின் மற்றும் வேலைத்திட்டங்களின் விபரங்களை "தகவல் மையம்" ஊடாக மக்களுக்கு தெரிவித்தனர் .
இறுதியாக தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்தை அனைத்து மக்களும் இணைந்து உரத்துக்கூறி "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் " பாடலுடன் நிகழ்வினை நிறைவேற்றினர்.

 27-11-11 யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வின் படத்தொகுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக