வெள்ளி, 4 நவம்பர், 2011

விண்வெளியில் இருந்து கிரகம் 8ம் தேதி பூமியை நெருங்குகிறது

விண்வெளியில் இருந்து கீழிறங்கும் கிரகம் ஒன்று, இந்த மாதம் 8ம் தேதி பூமியை நெருங்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ தெரிவித்துள்ளது.
2005 ஒய்.யூ.55 என்ற அந்த கிரகம், பூமியில் இருந்து 2.01 லட்சம் மைல் வரை நெருங்கி வரும். 8ம் தேதி இந்த அதிசயம் நடைபெற உள்ளது. இது சந்திரனில் இருந்து பூமிக்கு உள்ள தூரத்தில் 0.85 பங்கு ஆகும்.
விண் பாறாங்கல் வடிவிலான இந்த கிரகம், பூமிக்கு அருகில் வருவதால் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய உதவும். அதன்மூலம் பூமியின் பூர்விகம் மற்றும் கோள்கள் இடையே எதிர்கால நிகழ்வுகள் பற்றி விஞ்ஞானிகளுக்கு முக்கிய விஷயங்கள் தெரிய வரும்.
1,300 அடி அகலம் கொண்டது இந்த ஒய்.யூ.55 கிரகம். சீரற்ற சுழற்சி, மெதுவான சுற்றுப் பாதை கொண்ட இது, கருமையானது என நாசா தெரிவித்துள்ளது.
கார்பன் அடிப்படையிலான சி&டைப் கிரகங்கள் பற்றி விஞ்ஞானிகள் கூடுதல் தகவல்களை அறிய இந்த கிரகம் பூமிக்கு அருகில் வருவது வாய்ப்பாக அமையும் என்று நாசாவின் கலிபோர்னிய மைய அதிகாரி டான் யோமன்ஸ் தெரிவித்தார்.
இதுபோன்ற கார்பன் அடிப்படையிலான பாறை வடிவ கிரகங்கள் உயிர் வாழத் தேவையான காரணிகளை பூமிக்கு அளிக்கின்றன. அதன் மூலம் உயிரினங்கள் வாழ முடிகிறது. இந்த கிரகங்கள் இல்லாமல் இருந்தால் நாம் இங்கிருந்திருக்க முடியாது என்று டான் யோமன்ஸ் கூறினார்.
எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான ஆதாரங்களை அளிப்பதில் இந்த சி&டைப் கிரகங்கள் உதவும். இவற்றில் நீர் ஆதாரம் மற்றும் விமான எரிபொருளுக்கான மூலப் பொருள் இருப்பதால் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் பயன்படும் என்றும் டான் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக